24 ஏப்ரல், 2013

என் குருவே !!!

எப்போதோ மாட்டி வைத்த 
உன் நிழற் படம் கண்ணில் படுகின்றது .....
இருப்பினும்
 உன்னைக் கண்டு உருகிப் போகவில்லை....

யாரோஉச்சரித்த பெயர்  
உன்பெயர் எனத் தெரிந்தும் 
இன்று 
சலனம் ஏதும் இல்லை என்னில்...

அடிக்கடி மழை பட்டு 
வெளிவரும் மண் வாசமாய் 
உன்நினைவு கூட  என்னில்  
எந்த வாசத்தையும் 
கொண்டு வரவில்லை...... இன்று.....


எனக்குள் எல்லாமாக 
இருந்தவன் நீ....

உன்னைக் கண்ட பின்  தான் 
முதன்முதலாய்
உண்மையாகச் சிரித்தேன்...

சோற்றுக்கும், பணத்துக்கும் 
மேலே பலதையும்  புரிய வைத்தவன் நீ...

தந்தை நீ என நினைத்த என் நினைப்பை 
நிறுத்தினாய்,
தாயோ என்றதும் தடுத்தாய்,
சேய் என்றதும் இல்லை என்றாய்,
காதலனா என்றதற்கும் மறுத்தாய்,
புரியாமல் தவித்த போது 
தந்தையாய், தாயாய், சேயாய், காதலனாய்
மாறி என் உயிரையே உலுக்கி விட்டுச் சென்றாய் 


எண்ணிக் கொண்டே இருக்கிறேன் 
இன்றோடு வருடம் எட்டு ஆகின்றது
உன் நினைப்பைத் தவிர
எதிலும் லயிக்க மறுக்கிறது எனது மனம் 


கல்யாண வாழ்க்கை காத்து நிற்கின்றது 
கண் முன்னாலே..... 
கடமைகள் பெருகிக் கிடக்கிறது 
என் முன்னாலே.....
முட்டாள் ஆசைகளின் 
மேல் முள் போலப் படர்ந்து நிற்கிறேன் 
உன் நினைப்பை  அடியில் போட்டுக்கொண்டு,


கண் மூடினால்......
என் கருணைக் கடவுளே 
உன்னைக் கட்டிக் கொண்டு 
கதறி அழ ஏங்குகிறேன் !!!










1 கருத்து:

Unknown சொன்னது…

கவிதையோடு ஒரு காதல்....